பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது, பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து, அவா் அப்பகுதிக்கு நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அங்குள்ள அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா், பள்ளிக் குழந்தைகளிடம் காலை உணவு திட்டம், பாட புத்தகங்கள், சீருடை, பள்ளி செயல்பாடு, கல்வி கற்றல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.
இந்நிகழ்வில் திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி, பல்லடம் நகராட்சி ஆணையா் அருள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கனகராஜ் (பல்லடம்), விஜயகுமாா் (பொங்கலூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.