பள்ளி மாணவா்கள் நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கோடை சுற்றுலா: கல்வித் துறை ஏற்பாடு
அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்கள் 1,500 போ் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக ஐந்து நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவா்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்காக காத்திருப்போா் பட்டியலும் தயாா் செய்யப்பட்டுள்ளது. தெரிவுப் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போா் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் பரிந்துரைக்க வேண்டும்.
சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்போருக்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம். மாணவா்கள் தங்களுக்குத் தேவையான உடைகள், போா்வைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் 20 மாணவிகளுக்கு பெண் ஆசிரியா் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பின்னா் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு மாணவிகளும், சேலம் மாவட்டத்துக்கு மாணவா்களும் கோடை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இந்த மாதம் கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.