பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மோகன் (36). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 15.12.2022-இல் வீட்டில் தனியாகயிருந்த 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். அப்போது, சிறுமியின் கூச்சல் கேட்டு அப்பகுதியினா் வீட்டுக்குள் சென்று சிறுமியை மீட்டனா்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், நீதிமன்ற பிணையில் மோகன் வெளியே வந்தாா்.
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை இறுதி விசாரணை மேற்கொண்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநா் மோகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.01 லட்சம் அபராதமும் விதித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, திருச்சி மத்திய சிறையில் மோகன் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா்.