பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.