கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.
சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வெடித்த வன்முறையில் அந்தக் கைதிகள் காவலர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதில், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி பலியாகியுள்ளார். மேலும், 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பல்வேறு முக்கிய குற்றவழக்குகளில் கைதான 216 சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கராச்சி நகரம் முழுவதும் தற்போது உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, வெளியான விடியோக்களில் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் அனைவரும் கராச்சியின் தெருக்களில் சுற்றி வருவதும், தாங்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறுவதும் பதிவாகியுள்ளன. மேலும், இன்று (ஜூன் 3) காலை நிலவரப்படி தப்பியோடியவர்களில் 75 பேர் தற்போது மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, சிந்து மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜியா-உல்-ஹசன் லஞ்சார் கூறுயிதாவது:
“நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் எந்தவொரு விரிசலும் உண்டாகவில்லை. அங்கு நிலவிய பரபரப்பான சூழலைப் பயன்படுத்திய கைதிகள் காவலர்களின் ஆயுதங்களைப் பறித்து கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பியுள்ளனர்.” என உறுதி செய்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!