டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!
பாகிஸ்தான் ராணுவத் தளபதியை டிரம்ப் சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம்! காங்கிரஸ்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், உரையாடலின் போது, வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகவும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவுக்கு 5 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று(ஜூன் 18) வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர் டிரம்ப், அவருடன் மதிய உணவு விருந்தில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம் ரமேஷ் பேசியதாவது:
“கடந்த 37 நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்று டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. டிரம்ப்பிடம் பேசியது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையும் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டிலும் வேறுபாடு உள்ளது.
அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை, நாங்கள் மத்தியஸ்தத்தை நிராகரிக்கிறோம் என்று டிரம்பிடம் மோடி கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 நாள்களாக அமைதியாக இருந்தவர் டிரம்ப்பிடம் இதை சொன்னதாக நம்மை நம்பச் சொல்கிறார்கள். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமரால் ஏன் அழைக்க முடியாது? வெளியுறவு செயலர் சொன்னதை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்லுங்கள்.
பஹல்காம் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கும் இடையேயான நேரடி தொடர்பை டிரம்ப்பிடம் மோடி கூறியிருக்க வேண்டும். அசிம் முனிர் கருத்தின் பிரதிபலிப்பாக பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது அதே நபரை அமெரிக்க அதிபர் மதிய உணவுக்கு அழைத்திருப்பது இந்தியாவுக்கான அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.