பாகிஸ்தான் வாங்கும் சீனாவின் 'J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்' - இந்தியாவுக்கான அச்சுறுத்தலா?
J-35 - இது சீனாவின் இரண்டாவது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ஃபைட்டர் விமானம் ஆகும். இது கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்...
ஸ்டெல்த் ஃபைட்டர் என்றாலே, அதை ரேடார், சென்சார்... என எதனாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், இது ரேடாரின் கண்களுக்கு சின்ன பூச்சியைப் போலத் தான் தெரியும். அதனால், இது எதிரி நாடுகளுக்குள் எளிதாக நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டு, தங்களது நாட்டிற்கே அமைதியாக திரும்பி சென்றுவிடும்.
சீனா புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள J-35 இரட்டை இன்ஜீன்களைக் கொண்டதாகும். இது சிங்கிள் சீட்டர் சூப்பர்சோனிக் ஜெட். சூப்பர்சோனிக் ஜெட் என்றால் ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஜெட் ஆகும். ஒலி ஒரு நொடிக்கு 343 மீட்டர்கள் பயணிக்கும். இதை விட, அதிக வேகத்தில் பயணிக்கக்கூடியாது இந்தச் சூப்பர்சோனிக் ஜெட்.

அமெரிக்காவை விட...
அமெரிக்காவிடம் F-35 என்னும் ஃபைட்டர் ஜெட் உள்ளது. இது மிகவும் அட்வான்ஸ்ட் ரகம் ஆகும். ஆனால், சீனாவின் J-35, இதைவிட அட்வான்ஸ்ட் என்று கூறப்படுகிறது.
இந்த ஃபைட்டர் ஜெட்டை தான் இந்த ஆண்டு கடைசியில் வாங்க உள்ளது பாகிஸ்தான். அதுவும் ஒன்று... இரண்டு அல்ல. மொத்தம் 40. ஏற்கனவே, பாகிஸ்தானிடம் சீனாவின் 20 J-10C மற்றும் JF-1 உள்ளன.
J-35 ஃபைட்டர் ஜெட்டுகளை கடற்படைக்கானவை மற்றும் நிலத்தில் நடக்கும் தாக்குதலுக்கானவை என இரண்டு வகைகளாக அறிமுகப்படுத்தி உள்ளது சீனா. இதில் இரண்டாம் வகையைத் தான் பாகிஸ்தான் வாங்க உள்ளது.
இந்தியாவிற்கு என்ன கவலை?
பாகிஸ்தான் ஸ்டெல்த் ரக ஜெட்டை வாங்குவது நிச்சயம் இந்தியாவிற்கு ஆபத்தானது. இப்போது தான், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடந்து முடிந்துள்ளது. இருந்தும் இன்னும் பிரச்னைகள் அடங்கவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் இந்த ஜெட்டை வாங்குகின்றது.
அடுத்ததாக, இந்தியாவின் இரண்டு எல்லை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இந்த ஜெட் இருப்பது இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தல்.

இந்தியாவிடம் ஒரு ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்டும் இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இந்தியா இந்த ஜெட்டை உருவாக்குவதற்கான பணிகளில் உள்ளது. ஆனால், அது முழு உருவம் பெற எப்படியாவது 2035 ஆகிவிடும் என்கிறார்கள்.
J-35 இவர்கள் கூறுவதுப்போல செயல்படுமா என்பது இப்போது வரை தெளிவான தரவுகள் இல்லை. ஆனால், எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.