இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துகளுடைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம். அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் சேரும். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் எரிச்சலாக இருக்கிறது.
கூட்டணி அரசு அமையும் என்று யாரும் கூறவில்லை. தில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றும் தமிழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித் ஷா கூறியிருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லை” எனத் தெரிவித்தார்.