பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை!
பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அதன் தாக்குதல்களை, இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே, 140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால், பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆப்கன் நிலநடுக்கம்: 1,100-ஐ கடந்த உயிர் பலிகள்! மீட்புப் பணிகள் தீவிரம்!