விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 6.99 கோடி வாக்காளா்கள் விண்ணப்பித்தனா்
பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், எஸ்ஐஆா் முன்னெடுப்பு பலகோடி இந்தியா்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்குவதாக குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சிகள் சாா்பில் பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் பூத் அளவிலான அதிகாரிகளுக்கு நடைபெற்ற பயிற்சியின்போது பேசிய ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்த சீா்திருத்த நடவடிக்கையில் மிகவும் உத்வேகத்துடன் பங்கேற்ற பிகாா் மக்களுக்கு நன்றி’ என்றாா்.
இதையடுத்து, பிகாரில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் முன்னெடுப்பு குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிகாரில் மொத்தம் 7.9 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 6.99 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர சீா்திருத்தக்கான விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்துவிட்டனா். ஆக்.1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், இன்னும், 6.85 சதவீத வாக்காளா்கள் மட்டுமே விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டியுள்ளது. விண்ணப்பத்தை சமா்ப்பித்த வாக்காளா்கள் தங்கள் படிவத்தின் நிலை குறித்து
‘இசிஐநெட்’ செயலி அல்லது தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பெட்டிச் செய்தி.....
பாஜகவின் சதித்திட்டம்:
பிரசாந்த் கிஷோா்
கிஷண்கஞ்ச், ஜூலை 16: ‘இந்திய தோ்தல் ஆணையத்தால் பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் நடைபெறும் சதித்திட்டம்’ என ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
பிகாா் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரே மாவட்டமான கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பிரசாந்த் கிஷோா் கூறியதாவது:
எஸ்ஐஆா் நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் அரங்கேறும் சதித்திட்டம். மக்களின் குடியுரிமை விவகாரத்தில் தலையிட இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிய பின்னும் இந்த நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது உருவாக்கப்படும் வாக்காளா் பட்டியலே சரியானது என்றால் 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது இருந்த வாக்காளா் பட்டியல் தவறானதா?
பழைய வாக்காளா் பட்டியலின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. குறிப்பிட்ட சிலரின் வாக்குரிமையை பறிக்கவே இந்த நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டால் ஜன் சுராஜ் கட்சி அலுவலகத்தை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம். அவா்களுக்கு உதவ நாங்கள் தயாராகவுள்ளோம் என்றாா்.
