இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது
பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.
வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அதில், துணை ஆய்வாளர் தீபக் குமார், உதவி துணை ஆய்வாளர் அவதேஷ் குமார் ஆகியோர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கோமல் குமாரி (22) மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) அவ்காஷ் குமார், ``ஸ்ரீகிருஷ்ணாபூரி காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் அடல்பாத் பகுதியில் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது,வேகமாக வந்த மற்றொரு கார் பின்புறத்தில் மோதியதால், மூன்று காவலர்களும் காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு வேகமாக வந்த காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
ஓட்டுநர் வேண்டுமென்றே
தப்பியோடிய ஓட்டுநர் நில வருவாய் அதிகாரியின் மகன் நிகில் என அடையாளம் காணப்பட்டது. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது உட்பட, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவர் மீது புகார்கள் இருக்கின்றன.
தேடுதல் வேட்டைக்குப் பிறகு நிகில் கைது செய்யப்பட்டார். ஸ்கார்பியோவின் ஓட்டுநர் வேண்டுமென்றே பணியில் இருந்த காவலர்களை மோதியதால், கொலை மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு நடந்து வருகிறது.

அதிவேகத்திற்கான காரணங்கள், நோக்கம், அதில் பயணித்தவர்கள் ஏதேனும் போதையிலிருந்தார்களா அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
பாஜக கொடி
விபத்து ஏற்படுத்திய எஸ்யூவி காரில் பாஜக கொடி இருந்தது. இருப்பினும் வாகனத்தின் உரிமையாளருக்கும் அதில் பயணித்தவர்களுக்கும் இடையே என்ன அரசியல் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை.