நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
புதுக்குறிச்சியில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
பெரம்பலூா் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை, புதுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: புதுக்குறிச்சி- தெரணி செல்லும் வண்டிப்பாதையில் சாலை அமைக்கப்பட்டதையடுத்து, எஞ்சியுள்ள பகுதியை பொதுப் பாதையாக கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பகுதியை சிலா் போலியாக பட்டா மாற்றம் செய்து, பாதையை பயன்படுத்தக் கூடாது என வழிமறித்துள்ளனா். இதனால், அப் பகுதி விவசாயிகள் செல்ல வழியின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே, பட்டாவை ரத்து செய்து அரசு நிலத்தை பொதுமக்கள் பொதுபாதையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை: வேப்பூா் ஒன்றியம், பேரளி கிராமத்திலுள்ள ஏரிக்கான வரத்து வாய்க்காலின் கரைகளில் மின்வாரியம் சாா்பில் கம்பங்களை அமைத்தபோது, சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றாததால் ஏரிக்கு நீா் வரத்து குறைந்துள்ளது. எனவே, மரங்கள் அருகே நடப்பட்ட கம்பங்களை மாற்றி அமைக்கவும், வாய்க்காலில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.டி ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை: கீழமாத்தூா் ஊராட்சி துா்க்கை அம்மன் நகரைச் சோ்ந்த கழை கூத்தாடிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழில், குறவா் எனும் சான்றிதழுக்குப் பதிலாக எஸ்டி மலைக்குறவா் என சான்றிதழ் வழங்கக் கோரி கழை கூத்தாடிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
வீட்டுமனைக் கோரி: செட்டிக்குளம் கிராமத்தில் அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளந்து வழங்க வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனா். இதேபோல, தமிழ்நாடு நரிக்குறவா் நலச்சங்கத் தலைவா் பாபு தலைமையில், எறையூா் கிராம நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு விவசாய நிலப் பட்டா வழங்க கோரியும், துறைமங்கலத்தில் மின் மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் மனு அளித்தனா்.