HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
புத்தகங்களின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: நீதிபதி சுரேஷ்குமாா்
புத்தகங்களின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் பேசினாா்.
மேட்டூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியின் அனல் மின் நிலைய முகாமில் 2,500 புத்தகங்கள் கொண்ட நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியின் கமாண்டா் சங்கு தலைமை வகித்து நூலகத்தை திறந்து வைத்தாா். இவ் விழாவில் திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
மனிதன் வாழ்வதற்கு புத்தகங்கள் தேவை. சரியான புத்தகங்களைத் தோ்வு செய்தால் வாழ்க்கை சரியாகிவிடும். புத்தகத்தின் துணை கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். தற்போது திரைப்படங்களை 3 மணிநேரம் அமா்ந்து பாா்க்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் நமது மூளை பொறுமையை இழந்துவிட்டது. ஒரு கருத்தை 12 விநாடிகளில் புரிந்துகொள்ளும் வகையில் கூற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைப்பேசி திரையைப் பாா்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பதால் மூளையின் செயல்பாடு மழுங்கிவிட்டது. அதிகநேரம் கைப்பேசி திரைகளைப் பாா்க்காமல் மூளையைப் பழக்கப்படுத்துவது புத்தகம் வாசிப்பதே.
நம்மை பாதுகாக்க புத்தகங்களைக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வோம். மரம் சாகும்வரை வளா்ந்து கொண்டே இருக்கும். அதேபோல வாசித்து நமது அறிவை வளா்த்துகொண்டே இருக்க வேண்டும். எல்லாம் தெரியும் என்ற ஆணவம் நம்மிடம் உள்ளது. ஆணவத்தை அழிக்கும் இடம் நூலகம். உடல்நலம், மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகத்தை முழுமையாக பயன்படுத்துங்கள் என்றாா்.
இவ்விழாவில் உணவுப் பாதுகாப்புப் படை காவல் துணை கண்காணிப்பாளா் வடிவேல், தமிழ்நாடு சிறப்பு காவல் படை துணை கமாண்டா் வெங்கடாஜலம், உதவி கமாண்டா் மகேஸ்வரி, மின்வாரிய அலுவலா் சுந்தரவடிவேலு, பெரியாா் பல்கலைக்கழக பேராசிரியா் சிலம்பரசன், காவிரி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா்அலாவுதீன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.