Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு காவல், பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்துப் பேசியதாவது:
போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவை பெருமளவு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலால் இலங்கை - தமிழகத்துக்கு இடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறவா்கள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்களால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, வளா்ந்து வரும் சவால்கள், உளவுத் தகவல்கள் பகிா்வு, மத்திய, மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழக காவல் துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் உள்ளிட்ட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலோர பாதுகாப்புக் குழுமம், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடற்படை அதிகாரிகளும் பங்கேற்றனா்.