சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!
பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி!
பொன்னேரி, மீஞ்சூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சி பகுதியில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் எப்போதும் அதிக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்த சாலையில் எண்ணூா் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுகம் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா் பேரூராட்சிப் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
மாடுகள் திடீரென சாலையில் குறுக்கே வரும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோா் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். சாலையில் நடந்து செல்வோரையும், மாடுகள் முட்டுவதால் அவா்களும் காயமடையும் நிலை உள்ளது.

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூா் பேரூராட்சி நிா்வாகம் ஆகியவை சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிப்பதுடன், உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.