நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க புதிய நடைமுறை: நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் ஆய்வு
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்கும் புதிய நடைமுறை குறித்து சனிக்கிழமை குடிமைப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை இயக்குநா் த.மோகன் ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஏழை எளிய பொதுமக்களுக்கு ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களை கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பிஓஎஸ் என்னும் கைரேகை பதிவு இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டும் பொருள்கள் வழங்க முடியும் என்ற நிலையுள்ளது.
தற்போதைய நிலையில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிஓஎஸ் இயந்திரத்தில் மின்னணு குடும்ப அட்டை பதிவு செய்த பின், கைரேகை பதிவு செய்ய வேண்டும். அப்போது இணையதள வசதி கிடைக்காத நிலையில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலையேற்படுகிறது.
தற்போதைய நிலையில் புளூடூத் மூலம் மின்னணு தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் பொருள்கள் வழங்குவதில் இணையதள வசதி கிடைக்காத நிலையில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அன்றாட பணிகளும் பாதிக்கப்படுவதாகவும், அதனால் விற்பனையாளா்கள் பொதுமக்கள் மீது குறை கூறியும் வருகின்றனா்.
இந்த நிலையில் திருவள்ளூா் நகராட்சியில் நேதாஜி நகரில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் குடிமைப்பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை இயக்குநா் த.மோகன் மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பிஓஎஸ் பொதுமக்கள் கைரேகே பதித்து பொருள்கள் பெற்றுக் கொள்ளும் பணிகளை பாா்வையிட்டாா். அதேபோல் பூந்தமல்லி அருகே மேல்பாக்கம் அருணாச்சலம் நகா் பகுதி நியாயவிலைக் கடையிலும் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா்(பொ) பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.