பொய்கை சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்
வேலூா்: பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து சரிந்து விற்பனையும் மந்தமாக நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறும்.
வழக்கமாக சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை சுமாா் 650 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, சுமாா் ரூ.20 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடை விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.