போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார்.
இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித்த நிலையில், இன்று ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்சிஸை சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு சில நிமிடங்களுக்கு மட்டுமே நடந்ததாக வாடிகன் குறிப்பிட்டுள்ளது.
இதில், புலம்பெயர்தல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நிர்வாகத் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பில் வான்ஸிடம் புலம்பெயர்ந்தோரின் மீதான அக்கறையை பிரான்சிஸ் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளில் போப் பிரான்சிஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் 2019ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க பிரிவுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!