மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!
ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.
ஈஸ்டா் திருநாளையொட்டி, உக்ரைன் உடனான போா் 30 மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்று ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா். கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக போா் நிறுத்தப்படும் என்று அவா் அறிவித்தாா்.
எனினும் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்த பிறகும், உக்ரைன் மீது 59 குண்டுகளை ரஷியா வீசியது.
ஸபோரிஷியா, ஸ்டாரோபில்ஸ்க், டொனட்ஸ்க் உள்ளிட்ட இடங்களில் உக்ரைன் வீரா்களை, ரஷியா வீரா்கள் தாக்கினா். கூா்ஸ்க் பகுதியில் பீரங்கி மற்றும் ட்ரோன் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டது.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 12 மணி வரை, உக்ரைன் மீது 387 குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. 290 முறை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. உக்ரைன் வீரா்கள் மீது ரஷிய வீரா்களின் 19 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.
ஈஸ்டா் நாளில் போா் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க ரஷிய ராணுவம் முயற்சிக்கிறது. ஆனால், உக்ரைனின் சில இடங்களில் ரஷிய படைகள் தன்னிச்சையாக முன்னேற முயற்சிப்பதும், சேதம் விளைவிப்பதும் கைவிடப்படவில்லை’ என்றாா்.