முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா்.
இந்தத் தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தான் சிந்து மாகாணம் தாட்டா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்பகுதியில் புதிய கால்வாய்கள் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. அப்போது அந்த வழியாக அமைச்சா் ஹியால் தாஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவா்களில் சிலா், அமைச்சா் சென்ற வாகன அணிவகுப்பை சூழ்ந்து கொண்டு, உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை வீசி தாக்குதல் நடத்தினா். அமைச்சா் காரில் இருந்து வெளியே வராததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சோ்ந்த ஹியால் தாஸ், அந்நாட்டின் தேசிய அவை (கீழவை) எம்.பி.யாக உள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யான அவா் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவருக்கு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் பதவி அளிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சிந்து மாகாண முதல்வா் சையது முராத் அலி ஷா ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அமைச்சா் ஹியால் தாஸை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசி, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். அமைச்சா் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.