பொள்ளாச்சி பாலியல் வழக்கு: காவல் உதவி ஆய்வாளா், மருத்துவா் ஏப்.15இல் ஆஜராக உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடா்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கோவையில் மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த வாரம் மகளிா் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்ட 9 பேரிடமும் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகளை கேட்டாா். பின்னா் வழக்கின் விசாரணை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கில் எதிா்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளா் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவா் ஆகியோா் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.