பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
போனஸ் கொடுக்காத கோபம்; டோல்கேட்டை திறந்த ஊழியர்கள்; பணம் கொடுக்காமல் சென்ற வாகனங்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் லக்னோவை இணைக்கும் வகையில் யமுனை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் இருக்கிறது. இதில் பதேஹாபாத் என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட்டில் ஸ்ரீசாய் மற்றும் தாதர் என்ற நிறுவனம் டோல்கேட்டை வசூலித்து வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக போனஸ் கேட்டுக்கொண்டிருந்தனர். கம்பெனி நிர்வாகம் போனஸ் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறிக்கொண்டிருந்தது. ஆனால் கடைசி வரை அவர்களது வங்கிக்கணக்கில் போனஸ் வரவு வைக்கப்படவில்லை.
இதையடுத்து ஊழியர்கள் கோபத்தில் இரவு டோல்கேட்டை முற்றிலுமாக திறந்துவிட்டனர். அவர்கள் எந்த வாகனத்திடமும் கட்டணம் வசூலிக்கவில்லை. அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் சுதந்திரமாக சென்றன. ஊழியர்கள் அங்கு அமர்ந்து போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை வரை இந்த போராட்டம் நடந்தது.

இதனால் 10 மணி நேரமாக வாகனங்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சுதந்திரமாக சென்றது. கம்பெனி ஊழியர்கள் காலையில் போனஸ் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் ஊழியர்கள் மீண்டும் டோல்கேட்டை மூடி வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தனர்.
ஒரே நாள் இரவில் பல லட்சம் ரூபாய் கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் தீபாவளி நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. அனைத்தும் கட்டணம் செலுத்தவில்லை. இது குறித்து டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கூறுகையில்,''நான் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறேன், ஆனால் அவர்கள் எங்களுக்கு எந்த போனஸும் வழங்கவில்லை. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கூட வழங்குவதில்லை. நிறுவனம் இப்போது ஊழியர்களை மாற்றுவோம், ஆனால் எங்களுக்கு எந்த போனஸும் வழங்க மாட்டோம் என்று எங்களிடம் கூறுகிறது,"என்று கூறினார்.
ஆனால் கம்பெனி நிர்வாகம் 1100 ரூபாய் போனஸ் கொடுத்ததாகவும் அது குறைவு என்று கூறி ஊழியர்கள் போராடியதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்கள் போராட்டத்தால் அருகில் உள்ள டோல்கேட்டில் இருந்து ஊழியர்களை கொண்டு வந்து அதனை நடத்த கம்பெனி முயன்றது. ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை பணி செய்யவிடவில்லை. இது குறித்து கம்பெனி நிர்வாகம் கூறுகையில்,''நாங்கள் கடந்த மார்ச் மாதம் தான் ஒப்பந்தம் பெற்றோம் என்றும், எனவே முழு போனஸ் கொடுக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளது. இந்த சாலைதான் டெல்லிக்கும் பிரதான இணைப்பை கொடுக்கிறது.