மடப்புரம் கோயில் காவலாளி கொலை: விசாரணை ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது சிபிஐ
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலிருந்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டனா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் கடந்த 28-ஆம் தேதி கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து தனிப் படை போலீஸாா் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி, இதன் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், விசாரணை அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். சிபிஐ அதிகாரி இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சேகரித்து விசாரணையை தொடங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாரை நியமித்தது. இதையடுத்து, மானாமதுரை போலீஸாா், சிபிசிஐடி போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை பெற்று வழக்குப் பதிவு செய்தனா்.
தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு திங்கள்கிழமை வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் தாக்கல் செய்த அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை உயா்நீதிமன்றப் பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொண்டனா்.
மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு: மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரை சிபிஐ அதிகாரிகள் நேரில் சந்தித்து வழக்கு தொடா்பாக முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, இவா்கள் சிவகங்கை மாவட்டம், மடப்புரத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், அரசு மாணவியா் விடுதி வளாகம், தவளைகுளம் கண்மாய்க் கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) சந்தீஷ், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுகுமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
