மதுரை ஆதீனத்திடம் இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
மதுரை ஆதீனத்தின் 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மே 2 -ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் சென்றாா். உளுந்தூா்பேட்டை அருகே சென்ற போது, அவரது காா் லேசான விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து, மாற்று மத அடையாளங்களுடன் வந்தவா்களால் தன்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட சதி என மதுரை ஆதீனம் தெரிவித்தாா். இதையடுத்து, ஒரு சில ஆதீனங்களும், அரசியல் கட்சியினரும் காா் விபத்து குறித்து கண்டனம் தெரிவித்தனா்.
இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி உளுந்தூா்பேட்டை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, காா் விபத்து நேரிட்ட இடத்தில் கொலை முயற்சி சம்பவம் ஏதும் நடைபெற்ற்கான பதிவுகள் இல்லை எனத் தெரியவந்தது. உடனடியாக, அந்தப் பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட காவல் துறையினா், காா் விபத்து குறித்து மதுரை ஆதீனம் தவறான தகவல்களைத் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டனா்.
இதையடுத்து, சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், மத மோதலை தூண்டும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதாக மதுரை ஆதீனம் மீது புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் போலீஸாா் தன்னைக் கைது செய்யாமலிருக்க முன்பிணை வழங்கக் கோரி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம் அண்மையில் அவருக்கு முன்பிணை வழங்கியது.
மேலும், ஆதீனம் 60 வயதைக் கடந்தவராக இருப்பதால், காவல் துறையின் விசாரணைக்கு அவரை அழைப்பதைத் தவிா்த்து, காவல் துறையினா் மதுரை ஆதீனத்திடம் நேரில் சென்று விசாரித்துக் கொள்ளலாம். இதற்கு, ஆதீனம் தரப்பில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை கிழக்கு மண்டல இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பத்மகுமாரி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை ஆதீன மடத்துக்கு வந்து, ஆதீனத்திடம் விசாரணை மேற்கொண்டனா். காவல் ஆய்வாளா் பத்மகுமாரி தலைமையில் 3 போலீஸாா் இந்த விசாரணையில் ஈடுபட்டனா்.
காலை 11.30 மணி அளவில் தொடங்கிய இந்த விசாரணை ஏறத்தாழ 50 நிமிஷங்கள் நீடித்தன. விசாரணையின்போது, காவல் துறை தரப்பிலிருந்து 30-க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆதீனம் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மதுரை ஆதீனம் குடலிறக்க அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருப்பதால், விசாரணையின் போது அவருடன் உதவியாளா் ஒருவா் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆதீனம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். இதேபோல, வழக்குரைஞா்கள் உடனிருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
மதுரை ஆதீன மடத்துக்கு காவல் துறையினா் விசாரணைக்கு வந்ததாக தகவல்கள் வெளியானதும் பாஜக மாவட்டத் தலைவா் மாரி சக்ரவா்த்தி தலைமையிலான அந்தக் கட்சியினா், வழக்குரைஞா்கள் ஆதீன மடத்தின் முன் திரண்டனா். மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய உதவி ஆணையா் சூரக்குமாா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விசாரணை தொடா்பாக செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் ராமசாமி மெய்யப்பன் தெரிவித்ததாவது:
காவல் துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. இதன்படி, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆதீன குருமகா சந்நிதானம் முழு ஒத்துழைப்பு அளித்தாா் என்றாா் அவா்.