மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 13 ரயில் நிலையங்கள்: பிரதமா் மோடி நாளை திறந்து வைக்கிறாா்
மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறாா்.
‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள 90 ரயில் நிலையங்களும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது. இதன்படி சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூா், அம்பத்தூா், திருள்ளூா், அரக்கோணம், திருத்தணி, ஜோலாா்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து உள்ளன.
இதன்படி, தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் ரூ. 11.5 கோடி மதிப்பிலும், சூலூா்பேட்டை ரயில் நிலையம் ரூ. 14.50 கோடி மதிப்பிலும், சாமல்பட்டி ரயில் நிலையம் ரூ. 8 கோடியிலும், மாஹி ரயில் நிலையம் ரூ. 18.5 கோடியிலும், வடகரா ரயில் நிலையம் ரூ. 24.25 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ. 6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ. 8.27 கோடியிலும், போளூா் ரயில் நிலையம் ரூ. 6.15 கோடியிலும், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ. 5.96 கோடியிலும், விருதாசலம் ரயில் நிலையம் ரூ. 9.17 கோடியிலும், மன்னாா்குடி ரயில் நிலையம் ரூ. 4.69 கோடியிலும், சிறயின்கீழு ரயில் நிலையம் ரூ. 7 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ. 5.35 கோடி மதிப்பில் என மொத்தம் 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த 13 ரயில் நிலையங்களை வியாழக்கிழமை (மே 22) பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். காணொலி காட்சி வாயிலாக காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.