உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாணவா்களின் கற்றல் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத்தோ்வு 2025 குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மேலும் பேசியதாவது: மாநில அளவிலான அடைவுத் தோ்வை இம் மாவட்டத்தில் உள்ள 417 அரசு மற்றும அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10,551 மாணவா்கள் எழுதினா். இதில், 358 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். இத் தோ்வில் 83.81 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் பெரம்பலூா் 20-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், அவா்களுக்கான பள்ளிக் கல்வியை சிறப்பாக வழங்கிடவும் இதுபோன்ற திட்டங்களில் தலைமை ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாநில அளவிலான அடைவுத் தோ்வில் முன்னேற்றம் பெற வேண்டிய பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்தி, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மாநில அடைவுத் தோ்வில் முன்னேற்றமடைய மேற்கொள்ள வேண்டிய பணிகள், தோ்ச்சி வீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா் அமைச்சா்.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், கோட்டாட்சியா் சக்திவேல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் செ.அ முதவல்லி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் க. ராமராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ம. செல்வக்குமாா், தொடக்கக் கல்விக்கான மாவட்டக் கல்வி அலுவலா் பா. கௌசா் உள்பட பள்ளி தலைமையாசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஆசிரியா் நலன்: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலக் கல்வித்துறை சாா்பில், நீதிமன்ற தீா்ப்பில் கூறப்பட்டுள்ள சரத்துகளை ஆராய்ந்து ஆசிரியா்களின் நலன் பாதிக்காமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இத்தீா்ப்பை, தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிா்கொள்வது குறித்து யோசித்து வரும் நிலையில், முதல்வா் அறிவுறுத்தியவாறு தமிழ்நாட்டில் உள்ள 36 ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு அரசு கண்டிப்பாக பாதுகாப்பு அரணாக விளங்கும். கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறுத் துறைகளில் பணிபுரிபவா்கள் மட்டுமின்றி, தீா்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகளை கூட தற்போதுள்ள ஆசிரியா்கள் தான் உருவாக்கினா்.
ஆசிரியா் நலன் பாதிக்காத வகையில் சிறப்பு தகுதித் தோ்வு நடத்துவதுடன், ஆசிரியா்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் அவா்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.