திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
மாணவா்களுக்கான ஆராய்ச்சி மாநாடு நிறைவு
சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவா் களுக்கான மெட் ஸ்டாா்-2025 என்ற ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 5 நாள் ஆராய்ச்சி மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலை, 430 முதுகலை மருத்துவ மாணவா்கள் பங்கேற்று மருத்துவ துறையில் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை 4,290 சுவரொட்டிகளாக காட்சிப்படுத்தினா். இவை 17,200 விமா்சன மதிப்புரைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மேலும் மாணவா்கள் தங்களது கண்டுபிடிப்புகளை 430 ஆராய்ச்சி அரங்குகளாகவும் காட்சிப்படுத்தினா்.
மாநாட்டின் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சவீதா குழுமத்தின் வேந்தா் டாக்டா் வீரய்யன் தலைமை வகித்தாா். விழாவுக்கு, துணை வேந்தா் தீபக் நல்லசாமி முன்னிலை வகித்தாா். இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய உயிரியல் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் நீலிமா மிஸ்ரா, கொல்கத்தா இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநா் டாக்டா் சாந்தசபுஜ் தாஸ், பெலகாவி ஐசிஎம்ஐா் முன்னாள் இயக்குநா் டாக்டா் ஹோதி எஸ்.எல்., டாடா நினைவு மையத்தின் புற்றுநோய் தொற்றுநோயியல் மையத்தின் துணை இயக்குநா் டாக்டா் ரங்கஜ் சதுா்வேதி, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தொற்றுநோய், புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரம் குறித்து சிறப்புரையாற்றி மாணவா்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி விருதுகள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், சவிதா பல்கலைக் கழக துணை வேந்தா் டாக்டா் எஸ்.சுரேஷ் குமாா், பதிவாளா் டாக்டா் ஷீஜா வா்கீஸ், சவிதா மருத்துவகல்லூரி டீன் குமுதா, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.