மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு
நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி கவன ஈர்ப்பு நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா இணைந்து தொடக்கிவைத்தனர்.
இதில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"முதல்வர் உயிர் பிரச்னையான மொழிப்போரையும் உரிமை பிரச்னைக்கான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ள சூழலில் இவற்றை மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்
அவர் கூறியுள்ள இந்த இரண்டில் மொழி பிரச்னை எங்களின் உயிர் பிரச்னை என்கிறார். ஆகவே, நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்கு இந்த மொழியை பற்றி தெரிகின்றதைவிட, ஏதோ பதவிக்காக இந்த மாநிலத்தின் உரிமைகளைப் பற்றி அறியாதவர் பிதற்றுகின்ற பிதற்றலுக்கெல்லாம் பதில் கூறுகின்ற நிலைமையில் நாங்கள் இல்லை.
ஹிந்தியை திணிக்க முயற்சி செய்பவர்களுக்கு 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். இதுபோன்று பேசிவரும் ஆளுநர் ரவி போன்றவர்கள் 2026க்குப் பிறகு இங்கு இருக்கமாட்டார்கள்" என்றார்.
மேலும், 'அதிமுக ஆட்சிக் காலத்தில் என் மீது எந்த வழக்கும் போட்டதில்லை. திமுக ஆட்சி வந்த பிறகுதான் இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறேன்' என சீமான் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர், 'திமுக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, சாத்தான்களின் ஆட்சி அல்ல. சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று கூறினார்.
இதையும் படிக்க | பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!