வடபுதுப்பட்டியில் நாளை அதிமுக பொதுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்
கரூர்: ``இந்த ஒரு ஏரி நிரம்பினால் 50 கிராமங்கள் சிறக்கும்..'' - தீர்வு சொல்லும் மாணவிகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் சென்னை மற்றும் அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு நியூ டெல்லி ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2024 - ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் போட்டி சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
33 -வது ஆண்டின் இந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நாட்டின் மிக முக்கிய பிரச்னையான தண்ணீர் பிரச்னையை மையப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை’ என்ற மைய கருப்பொருள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போட்டியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகளான குணவர்ஷினி மற்றும் அதிதி ஆகிய இருவரும் தங்கள் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரரின் உதவியோடு ‘கரூர் மாவட்ட ஏரிகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட, மண்டல அளவுகளில் வெற்றி பெற்று, பிறகு மாநில அளவிற்கு தேர்வு செய்யப்பட்டது.
வெள்ளியணை பெரியகுளம்
இந்த ஆய்வுக் கட்டுரை குறித்து, மாணவிகள் குணவர்ஷினி மற்றும் அதிதி ஆகியோரிடம் பேசினோம்.
”கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிக முக்கியமான ஏரி வெள்ளியணை பெரியகுளம் என்று அழைக்கப்படும் வெள்ளியணை ஏரி. இது, சுமார் 475 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் இரண்டு மீட்டர். தற்பொழுது இந்த ஏரியில் கருவேலமரங்களும், பல்வேறு தேவையற்ற செடிகளும் வளர்ந்து ஏரியை நீர் தேங்காதவாறு ஆக்கிரமித்து உள்ளது. இந்த ஏரிக்கு திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு என்ற ஆற்றின் வழியாக தண்ணீர் வர கால்வாய் உள்ளது.

ஆனால், இந்த கால்வாயிலும் நீர் வருவதற்கு சாதகமற்ற நிலையில் அதன் அகலம் குறைந்து நீர் வரும் வழித்தடங்களை பல்வேறு வகையான செடி கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே, இந்தப் பகுதி முழுவதும் சீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு தூர் வாருவதற்கும், குடகனாறு ஆற்றில் இருந்து நீர் வருவதற்கான வழித்தடங்களை மராமத்து பணிகள் செய்வதற்கும் மிகுந்த தொகை தேவைப்படும்.
அதனால், அடிக்கடி தூர் வாருவது என்பதும் இயலாத காரியமே. இந்நிலையில், இந்த பிரச்னையை மிக எளிதில் சரி செய்வதற்கான ஒரு யோசனையை இந்த ஆய்வு கட்டுரை வாயிலாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
அதாவது, கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு இவற்றின் எதிரொலியாக ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துப் போய் புயல் மழை எனப்படும் மழை பெய்கிறது. இந்த புயல் மழை என்பது ஒரு ஆண்டுக்குள் பெய்ய வேண்டிய சராசரி பருவநிலை மழை அளவை தாண்டி மிகப்பெரிய மழைப்பொழிவு ஒரு சில வாரங்களில் பெய்கிறது. இதை ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் என்று கூறுகிறோம்.

கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையை விட இரண்டரை மடங்கு புயல் மழை பெய்துள்ளது என புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த நீர் சேகரிக்கப்படாமல் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது நம் அனைவரும் அறிந்தது தான். இவ்வாறு பெய்யக்கூடிய மழையின் காரணமாக பல லட்சம் லிட்டர் நீர் தேங்க இடமின்றி ஊருக்குள் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நீர் ஆறுகளில் கலப்பதனால் வீணாக கடலில் சென்று அடைகிறது.
கோடை கால வறட்சி முற்றிலும் தவிர்க்கப்படும்
இவ்வாறு, பெய்யக்கூடிய இந்த மழை நீரை குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பெய்யக்கூடிய இந்த மழை நீரை இந்த வெள்ளியணை ஏரியில் சேகரிப்பதன் மூலமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறும். சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலத்தடி நீர் உயரும். உதாரணமாக, இந்த ஏரி உள்ள வெள்ளியணை முதல் கிழக்கே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அய்யர்மலை கிராமம் வரையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதனால், விவசாயம் மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு ஆண்டு முழுவதும் இந்த நீர் போதுமானதாக இருக்கும்.

மேலும், கோடை காலங்களில் ஏற்படக்கூடிய வறட்சி இதனால் முற்றிலும் தவிர்க்கப்படும். இதற்கான ஒரு சிறிய முயற்சியாக ஒரு குறிப்பிட்ட பகுதியை நீர் தேங்குவதற்கு ஏதுவாக நாங்கள் தயார் செய்தோம். இந்த ஆய்வு கட்டுரையானது கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை அந்தப் பகுதியில் நாங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளியணை ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான குறிப்புகளை சேகரித்தோம்.
இயற்கை உயிர்சூழல்
அதன்பிறகு, இந்த ஆய்வின் முடிவில் நாங்கள் தெரிந்து கொண்டது, நவம்பர் மாதத்தில் அந்த ஏரி வறண்டு காணப்பட்டது. ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த புயல் மழை அங்கு தேங்குவதனால் பல்வேறு உயிரினங்கள் குறிப்பாக, நீர் வாழ் உயிரினங்களான மீன்கள், நண்டுகள், இறால், நத்தைகள், தவளைகள் மற்றும் பாம்புகள் போன்றவை அங்கு ஒரு உயிர் சூழலை உருவாக்கின.

எனவே, இதுபோன்று இயற்கை உயிர்சூழல் நிலையை உருவாக்குவதன் மூலமாக நாம் நம் பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்னை மட்டுமல்லாமல் பல்வேறு வேறு மறைமுக இயற்கை சார்ந்த நன்மைகளும் நமக்கு கிடைக்கும். அது என்னவெனில் இயற்கையாக ஒரு நீர்ச்சுழல் உருவாக்கப்படுகிறது.
இயற்கை கட்டமைக்கப்படும்
இது, பல்வேறு உயிரினங்களின் வாழிடத்தை உருவாக்குகிறது. அதன்காரணமாக, ஒரு சிறந்த உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையை ஏற்படுத்துகிறது. இதனால், அப்பகுதியில் நன்நீர் உயிர் சூழலையும் உருவாக்க முடியும். இதையே நீர் உயிர்ச்சூழல் மண்டலம் மற்றும் நீர் உயிரினங்களுக்கான வாழ்விடம் என்று கூறுகிறோம்.

தவிர, அங்கு தண்ணீர் தேங்கி இருந்தபோது பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்வதை நாங்கள் உற்று நோக்கினோம். இதன் மூலம், இந்த ஏரி எதிர்காலத்தில் ஒரு பறவைகள் இயற்கை சரணாலயமாக உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களின் இந்த ஆய்வுபடி அந்த ஏரிக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தினால், அங்கு இயற்கை கட்டமைக்கப்படும்” என்றார்கள்.
`கரூர் மாவட்ட வெப்பநிலையை குறைக்க முடியும்'
மேலும் ஆய்வுக் கட்டுரைப் பற்றி பேசிய மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன்,
“கடந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மிக அதிக வெப்பநிலை பதிவான இடங்களில் கரூர் மாவட்டத்தின் பரமத்தி என்ற இடமும் குறிப்பிடப்பட்டது. தற்பொழுது இந்த மாவட்டம் மட்டும் அல்லாமல் நமது பூமி என்ற கோள் நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. இதையே புவி வெப்பமயமாதல் என்று கூறுகிறோம். மேலும், புயல் மழை நீரை சேகரிப்பதன் வாயிலாக நேரடியாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுவது மட்டும் அல்லாமல், கரூர் மாவட்டத்தின் வெப்பநிலையை குறைக்க முடியும்.

அது எவ்வாறு எனில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நாம் சேகரிக்க கூடிய இந்த புயல் மழை நீர் அளவானது மிக அதிகம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட நீரின் காரணமாக இந்த பகுதியின் வெப்பநிலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தவிர, இந்த ஆய்வுக் கட்டுரை மூலமாக பல்வேறு இயற்கை சார்ந்த பிரச்னைகளையும், நம் அன்றாடம் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னையையும் தீர்க்க முடியும்.
நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்
இந்த வெள்ளியணை ஏறி நிரம்பினால் வெள்ளியணையைச் சுற்றியுள்ள பச்சப்பட்டி, குமாரபாளையம், செல்லாண்டிபட்டி, உப்பிடமங்கலம், லிங்கத்தூர், வையபுரி கவுண்டர் புதூர், வீரராக்கியம், வடக்கு மேட்டுப்பட்டி, லந்தக்கோட்டை, லந்தக்கோட்டை புதூர், மஞ்ச நாயக்கன்பட்டி, ஜெகதாபி, பொரணி, மாணிக்கபுரம், கீழடை, சேங்கல் உள்ளிட்ட 50 - க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். அதோடு, மழை பொழிவை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வரும் மக்களுக்கு இந்த ஏரியில் மழை நீர் நிரம்பினால் ஏரியை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து வகை நிலங்களும், விவசாயிகளும் பயன்பெற்று நல்ல மகசூலை எடுக்க முடியும். விவசாயம் சார்ந்த பொருட்களின் விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யும். மேலும் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேலும், இந்த வெள்ளியணை ஏரி நிரம்பும் பொழுது அதற்கு அருகில் உள்ள கிராமமான உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள உப்பிடமங்கலம் ஏரிக்கும் நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பினாலும் இதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகள் பயனடைய கூடும் மேற்குறிப்பிட்டவாறு. இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த இரண்டு ஏரிகளும் ஒரு முறை நிரம்பினால் இந்த மொத்த கரூர் மாவட்ட வெப்பநிலை வெகுவாக குறையும். மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு நேரடி மற்றும் மறைமுக பிரச்னைகளுக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும். மூன்றாவது உலகப்போர் என்பது நீருக்காகவே உருவாகும் என்று சொல்லப்படும் சூழலில், நீர்நிலைகளை நாம் நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
