எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சியமைப்போம்: கே.ஏ.செங்கோட்டையன்
வெம்பூா் சிப்காட் தொழிற்பூங்கா கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு
எட்டயபுரம் வட்டம் வெம்பூா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்காக 2,700 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்துவதற்காக எட்டயபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
வெம்பூா் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அண்மையில் தமிழ்நாடு அரசின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெம்பூா், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களும் விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிப்காட் நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுபா ஆகியோா் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெம்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் என்.பி. ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலா் தனவதி ஆகியோா் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணா்வுகளை, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.