Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவா் பேசியதாவது:
தமிழக அரசு, அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் மாதாந்திர உதவித் தொகைத் திட்டம், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி வாய்ப்புப் பெற்றுத் தரும் திட்டம், சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கும் திட்டம் உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துத் திட்டங்களும் உரிய முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 286 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.91 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் நா. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.