Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!
கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின்சி. இவா், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் ஐ.ஜி-யிடம் புகாா் மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை கடந்தாண்டு இறந்து விட்டாா். நானும், எனது அம்மா, தங்கை, தம்பி, பாட்டியுடன் வசித்து வருகிறோம். எனது அம்மாவின் வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் நடைபெற்று வருகிறது.
தந்தையின் மருத்துவச் செலவுக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த ஷாம் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடனாக பணம் பெற்றிருந்தோம். தந்தை இறப்பதற்கு முன்பு வரை கடனுக்கான வட்டி செலுத்தி வந்தோம். தற்போது போதிய வருமானம் இல்லாததால் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஷாம் கூலி ஆள்களுடன் வந்து எங்களைத் தாக்க முயன்றாா். இதுபற்றி காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். தற்போது ரூ. 32 லட்சம் அளிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் ஷாம் வற்புறுத்தினாா். இதுமட்டுமன்றி கொலை மிரட்டலும் விடுத்தாா். எனவே, கந்து வட்டி கேட்டு எங்கள் குடும்பத்தினரை மிரட்டி வரும் ஷாம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.