செய்திகள் :

முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

post image

தில்லியின் புதிய முதல்வராக முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா தில்லியின் 4-வது பெண் முதல்வராக நாளை பதவியேற்கவுள்ளார்.

70 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தில்லி பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் தலைநகரான தில்லியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

நாளை பதவியேற்பு விழாவை வைத்துக்கொண்டு யார் அடுத்த முதல்வர்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. முதல்வர் போட்டியில் அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா, மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சூரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அவர்களில் தில்லி ஷாலிமர் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா ஒருமனதாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்‌ஷித், அதிஷி மார்லெனா ஆகியோருக்குப் பின்னர் 4-வது பெண் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்கவுள்ளார்.

இதையும் படிக்க...தில்லியின் புதிய முதல்வர் ரேகா குப்தா!

யார் இந்த ரேகா குப்தா?

50 வயதான ரேகா குப்தா 1974 ஆம் ஆண்டில் ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்த்கர் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராகப் பணியாற்றியவர். 1976 ஆம் ஆண்டில், ரேகா குப்தாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது ​​அவரது குடும்பத்தினர் தில்லிக்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு அவர் தனது தொடக்கக் கல்வியை தில்லியில் முடித்தார்.

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ரேகா குப்தா, தில்லியில் பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலராகவும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் ரேகா குப்தா. 1996-97 ஆம் ஆண்டில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரானார். அங்கு மாணவர்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ரேகா குப்தா 2007 ஆம் ஆண்டு வடக்கு பிதாம்பூராவிலிருந்து கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் நூலகங்கள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற பொது வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில் மீண்டும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெற்கு தில்லியின் மேயராகவும் பணியாற்றினார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில் “சுமேதா யோஜனா”வை தொடங்கினார். மேலும், பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

இந்தாண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாய்ப்பைப் பெற்ற ரேகா குப்தா ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தில்லியில் உள்ள முக்கியப் பிரச்னைகளை நன்கு அறிந்தவர் என்பதால் ரேகாவுக்கு முதல் முயற்சியிலேயே முதல்வர் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க...கேஜரிவாலை தோற்கடித்தவருக்கு துணை முதல்வர் பதவி!

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க