மும்பை: மலை பயணம்; 40 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த கார்.. 3 பேர் உடல்கள் மீட்பு - நடந்தது என்ன?
மும்பையைச் சேர்ந்த பிரவின்(27), யாக்னேஷ்(27), ராஜ்போலி ஆகியோர் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் சிவன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் அவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.

அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மும்பையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கசரா மற்றும் உன்பர்மாலி மலைக்கிராமத்திற்கு இடையே அடர்ந்த காட்டுக்குள் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதை மாடு மேய்க்க வந்தவர்கள் கண்டுபிடித்தனர். உடனே, இது குறித்து அவர்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
கிராமத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கிரேன் மூலம் காரை சம்பவ இடத்தில் இருந்து மீட்டனர். அதோடு அங்கு இருந்த சாக்கடையில் தேடிப்பார்த்தபோது மூன்று பேர் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கார் பதிவு நம்பரை வைத்து அக்கார் மும்பையில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. இதையடுத்து கசரா போலீஸார் மும்பை போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். ஏற்கெனவே மும்பையில் 3 பேர் காணாமல் போய் இருப்பதாக உறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து மூன்று பேரின் உறவினர்களையும் அழைத்து வந்து உடலை அடையாளம் காட்டியபோது அவர்கள் காணாமல் போனவர்கள் என்று தெரிய வந்தது.

மூன்று பேரும் மலையில் வந்தபோது, வளைவில் கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதி 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளததாக போலீஸார் தெரிவித்தனர்.
சாலையில் இருந்து பார்த்தால் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறுகின்றனர். மூவரும் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.