ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
``மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடுத்த முயற்சி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்..'' - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் தி.மு.க விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
"தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி சேர்பவர்களின் சதவிகிதம் 51. ஆனால், இந்தியாவின் மொத்த சதவிகிதம் வெறும் 27 சதவிகிதம் தான். இதனை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், வரும் 2030-ம் ஆண்டுக்குள் உயர் கல்வி சேருபவர்களின் சதவிகிதத்தை 80 சதவிகிதமாக உயர்த்துவோம் என இலக்கு வைத்து முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். அதற்காக, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கல்வியில் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.

ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது என்ன என்று சொல்வார்களா?. இதுவரை, வடமாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி சாதித்தது என்ன என்று சொல்வார்களா?. அப்படி எதுவும் இல்லை. ஆனால், இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி தமிழ்நாடு நிறைய சாதித்திருக்கிறது. அதனால், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு எடுத்த முயற்சிதான் நாடு முழுவதும் எதிரொலிக்கப் போகிறது. இப்போது, மராட்டிய மாநிலத்திலும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் வக்ஃபு சட்டத் திருத்தம்" என்றார்.