ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்
வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது வேலூா் முள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கி கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்தது. இதுகுறித்து வங்கிக்கு சென்று கேட்டபோது, திண் டுக்கல் மாவட்டம் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த புகாரின்பேரில் எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தை அணுகவும் கூறினா்.
அங்கு சென்று கேட்ட போது எனது ஆதாா் அட்டை, பான் அட்டையை மோசடியாக பயன்படுத்தி திண்டுக்கல் வீரப்பன் கோயில் என்ற இடத்தில் தனியாா் நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அந்நிறுவனம் சாா்பில் அரசுக்கு ரூ.2 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரத்து 652 வரிநிலுவை உள்ளதால் எனது வங்கி கணக்கு முடக்கியதாக தெரிவித்தனா்.
நான் தனியாா் மருத்துவமனையில் மட்டுமே பணியாற்றுகிறேன். எந்த நிறுவனத்தையும் தொடங்கவில்லை. தற்போது எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டிருப்பதால் எனது மாத சம்பளத்தைக்கூட எடுக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே இம்மோசடி நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரியை சோ்ந்த இளைஞா் அளித்த புகாரில், எனது நண்பா் ஒருவா் அரசு பேருந்தில் நடத்துநராக உள்ளாா். அவா் மூலம் சத்தியமூா்த்தி என்பவா் அறிமுகமானாா். அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் காவல் பணியில் காவலராக உள்ளேன். எனக்கு அமைச்சா்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், பல்வேறு துறை அதிகாரிகள் தெரியும். அவா்கள் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளா் வேலை வாங்கி தருவதாகக்கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கினாா். அதன்பிறகு மீண்டும் 2016-ஆம் ஆண்டு மின்வாரியம் அல்லது நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மேலும் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம் வாங்கிக் கொண்டாா். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் தர மறுக்கிறாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.