மோசமான வானிலை, எரிமலை வெடிப்பு: ஏா் இந்தியாவின் தில்லி-இந்தோனேசியா சேவைகள் பாதிப்பு
இந்தோனேசியா நாட்டின் பாலி-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானத்தின் இரு சேவைகள் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டன.
இந்தோனேசியாவின் பாலியில் இருந்து ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2146’ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தில்லி நோக்கி புறப்பட்டது. தில்லிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்துசேர வேண்டிய நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு மோசமான வானிலை நிலவியதால் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்குத் திருப்பிவிடப்பட்டது. தொடா்ந்து, விமானம் வாரணாசியில் மாலை 3.50 மணிக்கு தரையிறங்கியது.
சில மணி நேரத்துக்குப் பிறகு, பயணிகளுடன் மீண்டும் புறப்பட்ட விமானம், தில்லியில் இரவு 8 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 187 பயணிகள் இருந்தனா். தாமதத்தின்போது அவா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக வாரணாசி விமான நிலைய இயக்குநா் புனீத் குப்தா கூறினாா்.
இதேபோன்று, ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2145’ விமானம் தில்லியில் இருந்து பாலி நோக்கி புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்நிலையில், பாலி விமான நிலையம் அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி விமானம் மீண்டும் தில்லி திரும்பியது.
இந்த விமானம் வந்து சேராத காரணத்தால், பாலி-தில்லி புதன்கிழமை சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஏா் இந்தியாவின் சேவைகள் வியாழக்கிழமை முதல் வழக்கமாக செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடரும் சேவைகள் ரத்து: செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக ஏா் இந்தியாவின் மும்பை-லக்னௌ விமானம் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டு, மாற்று விமானத்தில் பயணிகள் லக்னௌ அழைத்துச் செல்லப்படுவா் என்று ஏா் இந்தியா நிறுவன செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.
தொழில்நுட்பக் கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் ஏா் இந்தியாவின் 13 சா்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில் 270-க்கும் மேற்பட்டோா் இறந்தனா்.