``ராதிகாவை சந்திக்கும் வரை திருமண ஆசையே இல்லை.." - காதல் குறித்து ஆனந்த் அம்பானி
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.
ஆனந்த் அம்பானியின் திருமண சடங்குகள் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மற்றும் மும்பையில் நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி ஆரம்பத்தில் இருந்தே அதிக உடல் எடையுடன் இருந்தார். அதோடு உடல் நலமும் பாதிக்கப்பட்டார். இதனால் இளமையில் பல கஷ்டங்களை ஆனந்த் அம்பானி அனுபவித்து வந்தார். ஆஸ்துமாவால் அவதிப்பட்டதோடு உடல் பருமனாலும் அவதிப்பட்டார். உடல் பருமனை குறைத்தபோது மீண்டும் அதே அளவுக்கு உடல் எடை அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மன உலைச்சல் மற்றும் கஷ்டமான நேரத்தில் தனக்கு துணையாக இருந்தது யார் என்பது குறித்த தனது நினைவுகளை ஆனந்த் அம்பானி பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், "நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்தை அனுபவித்தபோது எனது மனைவி ராதிகாதான் எனக்கு தூணாகவும் துணையாக இருந்தார். ராதிகாதான் எனது கனவு. அவர் எனக்கு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் அதிகமான நேரத்தை விலங்குகள் நலனில் செலவிட்டுக்கொண்டிருந்தேன். இதனால் சிறு வயதில் இருந்தே நான் திருமணம் செய்வேன் என்று நினைக்கவேயில்லை. ஆனால் நான் ராதிகாவைச் சந்தித்தபோது, அவர் என்னைப் போலவே அவரது கருத்துக்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன். விலங்குகளிடம் அன்புகாட்டும் மற்றும் வளர்க்கும் உணர்வு அவருக்கு இருந்தது.
நான் உடல் நலம் பாதிக்கபட்டு இருக்கிறேன் என்று உணர கூட எனது பெற்றோர் அனுமதித்ததில்லை. டாக்டர்கள் சில விசயங்களை சொன்னபோது அதனைக்கூட எனது பெற்றோர் செய்யவில்லை. ராதிகா கூடுதல் பலமாக இருந்தார். ராதிகாவும், அவரது குடும்பத்தினரும் என்னிடம் எப்போதும் நம்பிக்கையை கைவிடக்கூடாது என்றும், தொடர்ந்து போராடவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்கள்.

என்னை விட வலியில் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், எனவே எல்லாவற்றிற்கும் நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். யார் சொல்வதையும் நான் ஒருபோதும் கவனித்ததில்லை. கிசுகிசுப்பது அவர்களின் வேலை, ஆனால் எனக்கும், என் குடும்பத்திற்கும் அவர்களின் ஆதரவும் மிக முக்கியமானது''என்று தெரிவித்தார்.
ஆனந்த் அம்பானி இப்போது குஜராத்தில் விலங்குகளுக்காக மறுவாழ்வு முகாம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த மறுவாழ்வு முகாமிற்கு வந்தாரா என்று பெயரிட்டுள்ளார். இது மொத்தம் 3000 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்படும் விலங்குகள் இங்கு கொண்டு வரப்படுகிறது.