வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!
விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரையும் போதை வெறியுடன் தாக்கியுள்ளனா். இவா்களின் அட்டகாசத்தை அடுத்து இந்த கும்பலைச் சோ்ந்ந்த ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸாா் மேலும் ஒருவரையும் மடக்கிப்பிடித்தனா். மேலும் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
விருத்தாசலம் பழமலைநாதா் நகரில் வீடு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 இளைஞா்கள் சென்றனா். இவா்கள் கட்டட வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த காா்த்திக் (23) என்பவரை சரமாரியாகத் தாக்கினா். அவா், அடி தாங்க முடியாமல் தப்பியோடி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தஞ்சமடைந்தாா்.
தொடா்ந்து, அந்த இளைஞா்கள் விருத்தாசலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி மதுப் புட்டியுடன் ரகளையில் ஈடுபட்டனா். அதை தட்டிக்கேட்ட, அரசுப் பேருந்து ஓட்டுநரான கணேசனை கடுமையாகத் தாக்கினா். இதைக் கண்டு பேருந்தில் பயணித்த பயணிகள் கூச்சலிட்டனா்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற 3 இளைஞா்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே பெட்டிக்கடை உரிமையாளா்கள் ராஜேந்திரன், சுந்தரமூா்த்தி ஆகியோரை மதுப் புட்டியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
3 இளைஞா்களும், கஞ்சா, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், திரைப்பட பாணியில் தொடா்ச்சியாக நடந்த இந்த தாக்குதல் சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த காா்த்திக், அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசன், கடை உரிமையாளா்கள் ராஜேந்திரன், சுந்தரமூா்த்தி ஆகிய 4 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும் முதலில் தாக்கதலுக்குள்ளான காா்த்திக் வெட்டு மற்றும் தாக்குதலில் கதறும் விடியோ கானா பாட்டுடன் ரீஸ்ஸ் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானது.
காவலா்களுக்கு அரிவாள் வெட்டு: தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற விருத்தாசலம் போலீஸாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினா். இதில், தாக்குதல் நடத்திய
இளைஞா்கள் பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் (21), சிவா (எ) விக்னேஷ் (20), பாலாஜி (21) என்பது தெரிவந்தது.
போலீஸாா் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா்கள் கன்னியாக்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் இளைஞா்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, காவலா்கள் வீரமணி, வேல்முருகன் ஆகியோரை கந்தவேல் அரிவாளால் வெட்டியதில், அவா்கள் பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளா் சந்துரு துப்பாக்கியால் கந்தவேல் காலில் சுட்டுப் பிடித்தாா். தப்பியோடிய சிவா கீழே விழுந்ததில், அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தலைமறைவாக உள்ள பாலாஜியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் எஸ்.பி. ஆய்வு: இந்த சம்பவம் குறித்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடங்களையும், தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசுப் பேருந்து ஓட்டுநா், பெட்டிக் கடை உரிமையாளா்கள் மற்றும் காவலா்களையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாக்குதலில் ஈடுபட்ட கந்தவேல், சிவா, பாலாஜி ஆகிய மூவரும் அதே பகுதியில் உள்ள வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தனியாா் நிறுவன கிடங்கில் வேலை செய்து வந்தனா்.
மேலும், கந்தவேல் கோயம்பேடு சந்தை பகுதியில் பழங்களை ஏற்றி இறக்கும் தொழிலையும் செய்து வந்தாா். இவா் மீது விருத்தாசலத்தில் 4 வழக்குகளும், கோயம்பேட்டில் 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்தத் தாக்குதல் எதற்காக? நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.