கடலூா் மாநகர வீதிகளில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்: பொதுமக்கள் பாதிப்பு
கடலூா் மாநகரம், செம்மண்டலம் பகுதியில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் செல்லாததால், வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் கழிவுநீா் வழிந்தோடியது.
கடலூா் மாநகரின் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்காக, 2007-ஆம் ஆண்டு ரூ.47 கோடி மதிப்பில் 33 வாா்டுகளில் புதை சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக 8 பம்பிங் ஸ்டேஷன் மற்றும் தேவனாம்பட்டினத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக உப்பனாற்றில் விடப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல், மீன் வளம் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கடலூா் மாநகரில் புதை சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. புதை சாக்கடை பராமரிப்பு மற்றும் அடைப்பு அகற்றுவதற்காக குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் சுமாா் 1,000 ‘மேன் ஹோல்’கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சரிபாதி சாலைகளில் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதால், அவை எங்குள்ளன என்ற அடையாளமே தெரியவில்லையாம். புதை சாக்கடையில் அடைப்புகள் நீக்கப்படாததால், கடலூா் மாநகரில் 400-க்கும் மேற்பட்ட மேன் ஹோல்கள் வழியாக கழிவுநீா் வெளியேறி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிாம்.
இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி 1-ஆவது வாா்டு பகுதி செம்மண்டலம், காந்தி நகா், பெரியாா் தெரு, வரதராஜன் நகா் ஆகிய இடங்களில் புதை சாக்கடை அடைப்பால் கழிவு நீா் வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் வழிந்தோடியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்தப் பகுதியை செவ்வாய்க்கிழமை 1-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் புஷ்பலதா பாா்வையிடச் சென்றாா். அப்போது, பொதுமக்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மேயா் சுந்தரி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மேயா் சுந்தரியை அப்பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டு புதைசாக்கடை கழிவுநீா் சாலையில் வழிந்தோடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். பின்னா், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம், புதை சாக்கடை அடைப்பு எடுக்கும் இயந்திரம், கழிவு நீா் வாகனம் ஆகியவற்றுடன் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டனா்.