ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புகிறோம்: மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்
ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அதிரடியாக விளையாடுவதை விரும்புகிறோம்
அதிரடியாக விளையாட முயற்சித்து தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது விமர்சிக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினால், ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும். அவர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும்போது, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். அதனால், அவர் அதிரடியாக விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம்.
இதையும் படிக்க: அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு
அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் அவர் ஒருபோதும் மாற்றம் செய்யவில்லை. குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தபோதும், முதல் போட்டியிலிருந்தே அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். அணிக்காக அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க விரும்புகிறார். அணி நிர்வாகமும் அதனையே விரும்புகிறது. அவர் அதிரடியாக விளையாடுவதற்கு அணி நிர்வாகம் முழு ஆதரவையும் அளிக்கிறது என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.