வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!
வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.
சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது களத்திங்கல் நௌஃபல் என்ற இளைஞரின் கதை.
உலகை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில், தன்னுடைய குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர் நௌஃபல், நொறுங்கி நிலைகுலைந்தவர்களுக்கு மீண்டெழுவதன் முன்னோடியாக மாறியிருக்கிறார்.
சமுதாயம் அளித்திருக்கும் ஆதரவோடு, வயநாடு நிலச்சரிவின் நினைவாக ஒரு உணவகம் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய வீட்டைப் புதுப்பித்துக் கொண்டார். புதிய காதலைத் தேடிக்கண்டைந்துள்ளார். இருண்டுபோன வாழ்விலும் ஒளியைத் தேடும் வழியைக் கண்டுபிடித்து அடுத்த நிலைக்கு நகர்ந்துள்ளார் நௌபால்.
கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில், வயநாடு மாவட்டம் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் குடியிருந்தப் பகுதிகளை சூறையாடிச் சென்றது. இதில், நௌஃபாலின் குடும்பத்தில் அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.
இந்த நிலச்சரிவு வயநாட்டை மட்டுமல்லாமல், பலரையும் போல நௌஃபாலின் வாழ்க்கையையும் அடியோடுப் புரட்டிப்போட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, நௌஃபல் ஓமனில், உணவகம் ஒன்றில் சமையலராகப் பணியாற்றி வந்தார். வயநாடு நிலச்சரிவு குறித்து செய்தியறிந்ததும் விரைந்து இந்தியா வந்த அவர் தன்னுடைய வீடு இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு வேறொன்றுமில்லை.. வெறும் இடிபாடுகள்தான்.
இவ்வளவுப் பெரிய இழப்பையும் சந்தித்த நௌஃபல், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தனது வாழ்வை மீண்டும் கட்டமைக்க முயன்றார். தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கினார். தனது காயத்துக்கு தானே மருந்தாக மாறினார்.
இந்த நிலையில்தான், கேரளத்தில் இயங்கி வரும் நட்வத்துல் முஜாகிதீன் என்ற முஸ்லிம் சமுதாய அமைப்பு, இவருக்கு ரூ.7 லட்சம் நிதித் திரட்டிக் கொடுத்தது. இதைக் கொண்டு அவர் ஏதேனும் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தார்.
அப்போதுதான், தனது மனைவி சஜ்னாவின் ஆசை நினைவுக்கு வந்தது. தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஜூலை 30ஆம் தேதியை நினைவுபடுத்தும் வகையில் ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். தனது மனைவியின் ஆசையையும் நிறைவேற்றினார்.
பலரும், இந்த பெயருக்கு எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தபோதும், அவர் அதனை ஏற்கவில்லை. இந்த நாள்தான், மக்களின் உள்ளங்களில் கருணையைப் பொழியவைத்தது, மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக மாறினார்கள் என நம்பினார்.
இப்போது, ஓமனில் இருந்தும் ஓர் ஆதரவுக் கரம் நீண்டது. அங்குள்ள கேரள முஸ்லிம் கலாசார மையம் அவருக்கு ஒரு நிலத்தை வாங்கி அங்கு வீட்டைக் கட்டி, அதன் சாவி அண்மையில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதரவின்றி இருந்த நௌஃபாலுக்கு பலரும் உதவி செய்தபோது அவருக்கு வாழ்க்கையும் கொஞ்சம் கருணை காட்டியது. சாஃப்னா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இது பற்றி நௌஃபல் கூறுகையில், வயநாடு நிலச்சரிவின்போது நிர்கதியான எனக்கு பலரும் உதவ முன்வந்தனர். முன்பின் தெரியாதவர்கள் கூட. இது கேரளாவில் மட்டுமே சாத்தியம் என நான் நினைத்தேன். எங்கு மனித நேயமும், மக்கள் சமுதாயமும் ஒற்றுமையாக பலமாக இருக்கிறதோ அங்கு இந்த மாற்றம் நிகழும். இந்த பேரழிவில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு ஒரு உத்வேகமாக நௌஃபல் வாழ்க்கை மாறியிருக்கிறது.
Naufal, who lost his entire life in the Wayanad landslide, has confidently started a restaurant. Its name is July 30.
இதையும் படிக்க.. 280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!