ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!
வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்த நியூசி; அரையிறுதியில் ஆஸி.யை எதிர்கொள்ளும் இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 128 ரன்களுக்கு இந்திய அணி அதன் 4-வது விக்கெட்டினை இழந்தது. அக்ஷர் படேல் 61 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினார். ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கைல் ஜேமிசன், வில்லியம் ஓ’ரூர்க், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!
வருண் சக்கரவர்த்தி அசத்தல்
250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 120 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 28 ரன்களும், வில் யங் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!
இறுதியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் மூன்று வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
இந்திய அணி நாளை மறுநாள் (மார்ச் 4) துபையில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. மார்ச் 5 ஆம் தேதி லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.