முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்கா நடத்தவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்திருந்தது.
வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது தொடர்பாக டிரம்ப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் பேசியதாவது:
”பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தீர்த்து வைத்தேன் என்று நினைக்கிறேன். இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நாங்கள் பெரிதளவில் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றோம்.
மோதலின் இறுதியில் யாராவது ஒருவர் துப்பாக்கிச் சண்டையை நிறுத்த வேண்டும். ஆனால், மோதல் பெரிதாகிக் கொண்டே போனது. நாங்கள் இரு நாட்டையும் தொடர்புகொண்டு மோதலை நிறுத்தினோம். ஆனால், இரு நாள்களுக்கு பிறகு வேறு மாதிரி பேசப்பட்டது.
பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்களும் நல்ல தலைவர்களும் உள்ளனர். இந்தியா எனது நண்பர், மோடி ஒரு சிறந்த மனிதர்” எனக் குறிப்பிட்டார்.
இந்தியா நிராகரிப்பு
வர்த்தகம் மூலம் மோதல் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் முதல்முறையாக தெரிவித்தபோதே, பாகிஸ்தானுடன் மோதல் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது.
மேலும், மோதல் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “எதிா்பாராத அளவு சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு உலக நாடுகளை பாகிஸ்தான் அணுகியது. ஒருகட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநா் மூலம் இந்தியாவைத் தொடா்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது.” எனக் குறிப்பிட்டார்.