வள்ளியூரில் ரூ.1.83 கோடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்து அதற்காக ரூ.1.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிதாக 13 பணியிடங்களையும் அறிவித்துள்ளது.
வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இது தவிர மேல்முறையீட்டு வழக்குகளுக்காக ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகின்ற கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியதுள்ளது.
எனவே வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கவேண்டும் என அப்பகுதி வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி ஆகியோரிடம் பேரவைத் தலைவா் வலியுறுத்தியதன்பேரில், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும். அதற்கு தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டது. மேலும் புதிய நீதிமன்றத்திற்கு ரூ.1.83 கோடி நிதியும் வழங்கி 13 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், மாவட்ட நீதிபதி, எழுத்தா், உதவியாளா், சுருக்கெழுத்தா், தட்டச்சா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளைத் தொடங்க நீதித்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு முழு முயற்சி எடுத்த பேரவைத் தலைவா், ஆணை பிறப்பித்த தமிழக முதல்வா், சட்டத்துறை அமைச்சா் ஆகியோருக்கு வள்ளியூா் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.