கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!
ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.17) இரவு அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அங்கு சென்று கொண்டிருந்த 5 குட்டிகள் உள்ளிட்ட 9 ஒட்டகங்கள் மீது மோதியது. இதில், அந்த ஒட்டகங்கள் அனைத்தும் சம்பவயிடத்திலேயே பலியாகின.
இந்தச் செய்தி அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து, இன்று (ஏப்.18) கூட்டம் கூட்டமாகக் கிராமவாசிகள் கூடி அந்த நெடுஞ்சாலையை சுமார் 3 மணிநேரம் முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விபத்துக்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், அப்பகுதியில் ரோந்து பணிகள் அதிகரித்து விலங்குகள் எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். பின்னர், அப்பகுதி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு ஒட்டகங்களுக்கு அங்கேயே கால்நடை மருத்துவர் ஒருவரால் சிகிச்சையளிக்கப்பட்டதுடன், பலியான ஒட்டகங்களின் உடலில் கூராய்வு சோதனை நடத்தப்பட்டு அவை தகனம் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒட்டகம் ராஜஸ்தானின் மாநில விலங்கு என்பதினால் ஒட்டகத்தை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?