வாடிக்கையாளர்களின் ரூ. 4.58 கோடி கையாடல்! முதலீடு செய்த வங்கி மேலாளர் கைது
ராஜஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்து, அதனை பங்குச்சந்தையில் முதலீடு செய்த வங்கி மேலாளரான சாக்ஷி குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.
தனது வங்கிக் கணக்கு குறித்து, வாடிக்கையாளர் ஒருவர் விசாரித்தபோதுதான், இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
2020 முதல் 2023 ஆண்டு வரையில், 41 வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து ரூ. 4.58 கோடி ரூபாயை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அதனை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளார்.
பரிவர்த்தனை செய்திகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருக்க, கணக்குகளுடன் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களையும் மாற்றி, தனது குடும்பத்தினரின் மொபைல் எண்களை உள்படுத்தியுள்ளார்.
ஆனால், பங்குச்சந்தையில் இழப்புகள் ஏற்பட்டதால், பணத்தை மீண்டும் கணக்குகளில் செலுத்தத் தவறிவிட்டார். இந்த நிலையில்தான், அவரின் முறைகேடு அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
இதனிடையே, சாக்ஷி இடைநீக்கம் செய்யப்பட்டு, கைதானதை அறிந்த அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர், வீட்டில் பணத்தை வைத்திருக்க முடியாமல்தான், வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்.
இனிமேல், வங்கியிலும் வைத்திருக்க முடியாதென்றால், என்னதான் செய்ய முடியும்? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.