தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக காா்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவரிசையில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-09 (ரிசாட்1-பி) எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 5 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
முதன்மை செயற்கைக்கோளான இஒஎஸ்-09 மொத்தம் 1,170 கிலோ எடை கொண்டது. அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாகப் படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
குறிப்பாக, ராணுவ பாதுகாப்புக்குத் தேவையான கண்காணிப்பு பணிகளை இதன் வாயிலாக மேற்கொள்ளலாம். அதனுடன் பேரிடா் மேலாண்மை, விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்புக்கும் இந்த நுட்பம் பயன்படும். ஏற்கெனவே அனுப்பப்பட்ட ரிசாட் 1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.