விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?
பொன்னி தொடரில் நடித்துவரும் நடிகர் சபரி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கால், கைகளில் கட்டுப் போட்டவாறு ரசிகர்களுக்காக விடியோ வெளியிட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிகிச்சை முடிந்து விரைவில் மீண்டு வருவதாகவும், ரசிகர்களின் பிரார்த்தனைகள் தனக்கு தேவைப்படுவதாகவும் சபரி குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு பொன்னி தொடர் ஒளிபரப்பாகிவந்தது. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வந்தனர்.
பொன்னி என்ற இளம்பெண், தனது தந்தையின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள இருக்கும்போது, எதிர்பாராத விதமாக நாயகனை திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் தனது புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும், அதனை முறியடித்து தனது தந்தையுடன் சேர்வதை மையமாக வைத்து பொன்னி தொடர் ஒளிபரப்பானது.
உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர்கொடுக்கும் வகையில் வைஷ்ணவியின் நடிப்பு இருந்ததாக பலரால் பாரட்டப்பட்டது. இதோடு மட்டுமின்றி துணை பாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்ததால், பிற்பகலில் ஒளிபரப்பாகும் தொடரில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடராக பொன்னி இருந்துவந்தது.
கடந்த 2023 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர், கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், 663 எபிசோடுகளுடன் இம்மாத தொடக்கத்தில் நிறைவடைந்தது.
இதனிடையே பொன்னி தொடரின் நாயகன் சபரி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் விடியோ வெளியாகியுள்ளது. பொன்னி இறுதிநாள் படப்பிடிப்பிலும் கையில் கட்டுடன் இருந்த நிலையில், தற்போது முழு நேர சிகிச்சையில் உள்ளார் நாயகன் சபரி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நான் ஓய்வில் இருக்கிறேன். தற்போது குணமடைந்து வருகிறேன். விரைவில் நலமுடன் திரும்புவேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு விபத்து நேர்ந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறேன். அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. என்னால் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை; அதற்கு மன்னிக்கவும். உங்களின் பிரார்த்தனைகள் தேவை எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே பொன்னி தொடர் முடிவுக்கு காரணம், நாயகன் சபரி விபத்தில் சிக்கியதுதானா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.