விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது... மனம் திறந்த இளம் ஆர்சிபி வீரர்!
விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ஆர்சிபி அசத்தியது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 8,168 ரன்கள் குவித்துள்ளார்.
இது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியதாவது:
விராட் கோலியுடன் விளையாடியது மகிழ்ச்சியான விஷயம். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக விராட் கோலி இதனை செய்துள்ளார்.
ஓவ்வொரு சீசனும் 400, 500 ரன்கள் குவிப்பதை அவர் எளிதென காண்பிக்கிறார். ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல.
ஒரு இளைஞராக நான் உள்பட பலரும் இதை விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம் என்றார்.